திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த புஜ்ஜி ரெட்டி பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி ராஜேந்திரன். தீராத வயிற்று வலியின் காரணமாக கடந்த சில வருடங்களாக அவதியுற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் வயிறு வலி அதிகரித்ததால் வலி தாங்க முடியாமல் இருந்த விவசாய கூலி தொழிலாளி ராஜேந்திரன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனால் அருகில் இருந்தவர்கள் ராஜேந்திரனை மீட்டு திருத்தணி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.இந்த நிலையில் திருத்தணி காவல் நிலையத்தில் இருந்து பிரேத பரிசோதனை செய்வதற்கான் அனுமதி கடிதம் கொண்டு வருவதற்காக உறவினர்கள் சென்றிருந்தனர்.
இந்த நிலையில் காவல்துறையில் கடிதம் பெற்றுக்கொண்டு இன்று திருவள்ளூர் அமரர் அறையில் வைக்கப்பட்ட அவரது உடலை பெறுவதற்காக வந்த உறவினர்களுக்கு ராஜேந்திரன் உடலுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடலை கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் விவசாயக் கூலி தொழிலாளி ராஜேந்திரனுக்கு 60 வயதான நிலையில் 55 வயதில் இருக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலை எடுத்துச் செல்லும்படி கூறியதால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அமரர் அறையை முற்றுகையிட்டு ராஜேந்திரனின் உடலை கொடுக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனை அடுத்து நேற்று யார் யார் உடலை வெளியில் அனுப்பினார்கள் என்பது குறித்து அமரர் அறையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஊழியர்கள் ராஜேந்திரன் உறவினர்கள் முன் ஆய்வு செய்தனர்.
முதியவர் உடலை பீகாருக்கு அனுப்பி வைத்ததாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் மாஞ்சி (55) என்பவர் அவரது உறவினர் கொடுத்த தகவலின் பேரில் கடந்த 30 ஆம் தேதி புறப்பட்டு 1-ஆம் தேதி சென்னை வந்தவர் அங்கிருந்து இரண்டாம் தேதி வெங்கல் அருகே தேசிய நெடுஞ்சாலைக்கு சாலை அமைக்கும் பணிக்கு வந்து சேர்ந்துள்ளார். 2-ஆம் தேதி காலை 10 மணி அளவில் மனோஜ் மாஞ்சிக்கு சாலை பணி செய்து கொண்டிருந்தபோது உடல்நிலை மோசமானதால் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்த்ததும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போனதும் தெரிய வந்தது.
இந்நிலையில் பீகாரில் இருந்து மனோஜ் மாஞ்சியின் உறவினர்கள் அவரது உடலைப் பெற்று செல்வதற்காக ஒருவர் மட்டும் வந்து பிரேத பரிசோதனைக்கு பின் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் முதியவர் ராஜேந்திரனின் உடலை கேட்டு அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் டவுன் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பீகாருக்கு கொண்டு செல்லப்பட்ட முதியவரின் உடல் கிட்டத்தட்ட அவர்கள் இருக்கும் பகுதியை நெருங்கிய நிலையில் உடலை திருப்பி கொண்டு வரும்படி தெரிவித்தனர். இதனால் முதியவர் ராஜேந்திரன் உடல் நாளை காலை வந்து சேரும் என தெரிவித்து அனுப்பி வைத்தனர் இதனால் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே பரபரப்பாக காணப்பட்டது. அரசின் அலட்சியத்தால் இன்னும் என்னென்ன மாயமாக போகிறதோ என்று மக்கள் புலம்பும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பேட்டி முத்து
ராஜேந்திரனின் உறவினர் வழக்கறிஞர்